பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) ரூ.4,435 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செபி-க்கு வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
ஐஓசி-யின் இயக்குநர் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ரூ.4,435 கோடிக்கு பங்குகளை திரும்பப் பெற ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி, பங்கு ஒன்று ரூ.149 விலையில் 29.76 கோடி பங்குகள் (3.06%) திரும்ப வாங்கப்படவுள்ளது என ஐஓசி தெரிவித்துள்ளது. மேலும், ஐஓசி நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு ரூ.6,556 கோடியை இடைக்கால ஈவுத்தொகையாக பகிர்ந்தளிக்க உள்ளதாக கூறியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தின்போது ஐஓசி பங்குகளின் விலை 0.5 சதவீதம் உயர்ந்து ரூ.137.20-ஆக இருந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை முடிவுற்ற விலையை காட்டிலும் 8.6 சதவீதம் அதிக பிரீமிய விலையில் ஐஓசி பங்குகள் திரும்பப் பெறப்படவுள்ளன.
ஐஓசி நிறுவனத்தில் மத்திய அரசு 54.06 சதவீத பங்கு மூலதனத்தை வைத்துள்ளது. எனவே, இந்த பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தில் மத்திய அரசு பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோல் இந்தியா, பிஹெச்இஎல், ஆயில் இந்தியா போன்ற பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் ரூ.5,000 கோடியை திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.