பன்மடங்கு வருவாயை உறுதி செய்யும் பரஸ்பர நிதி முதலீடு!

நம் நாட்டில் பெரும்பாலான சேமிப்புகள் ரொக்கமாகவோ, நகையாகவோ, நிலமாகவோ உள்ளன. நடுத்தர வர்க்கத்தினரில் சிலர், வங்கிகளில், அஞ்சல் நிலையங்களில் சேமிக்கின்றனர்.
பன்மடங்கு வருவாயை உறுதி செய்யும் பரஸ்பர நிதி முதலீடு!


நம் நாட்டில் பெரும்பாலான சேமிப்புகள் ரொக்கமாகவோ, நகையாகவோ, நிலமாகவோ உள்ளன. நடுத்தர வர்க்கத்தினரில் சிலர், வங்கிகளில், அஞ்சல் நிலையங்களில் சேமிக்கின்றனர். சிலர் காப்பீட்டுத் திட்டங்களிலும் முதலீடு செய்கின்றனர். 

இவற்றில், காப்பீட்டுத் திட்டங்கள் இழப்பை ஈடுகட்டுவதற்குத்தான் சரியான திட்டமாக இருக்குமேயொழிய, சிறந்த சேமிப்புத் திட்டமாக கருதமுடியாது. வங்கிகள், அஞ்சலகங்களில் முதலீடு செய்வது பணத்துக்கு பாதுகாப்பேயொழிய, பெரிய அளவில் வட்டி வருவாயை எதிர்பார்க்க முடியாது.
பங்குச்சந்தை முதலீட்டில் நல்ல வருவாய் கிடைக்கும். ஆனால், அதில் நாம் பல தவறுகள் செய்யும் அபாயம் உள்ளது.

ஆனால் பரஸ்பர நிதி திட்டத்தில் (மியூச்சுவல் பண்ட்), சேமிப்பு, பாதுகாப்பு, அதிக வருவாய் என அனைத்தும் ஒரு சேர கிடைக்கும். எனவேதான் பரஸ்பர நிதி திட்டம் எல்லா தரப்பினருக்கும் உகந்த ஒன்றாக உள்ளது. 

இத்திட்டத்தில், நாம் தனியாக கண்காணித்து முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நாம் அளிக்கும் நிதியை நிர்வகிக்க பல்வேறு நிதிநிறுவனங்கள் (AMC- Asset Management Companies)உள்ளன. நமக்கு சொத்தாக கருதப்படும் மியூச்சுவல் பண்ட் அலகுகளை (யூனிட்) அவர்கள் நிர்வகிக்கின்றனர். 

அந்த நிறுவனங்கள் பல்வேறு சிறந்த நிதி ஆலோசகர்களை கொண்டு செயல்படுவதால், நமது முதலீடு நல்ல வளர்ச்சியை அடையும்.

மியூச்சுவல் பண்டில் முகவர்கள் மூலமாகவோ, நேரடியாகவோ முதலீடு செய்யலாம். முகவர்கள் மூலமாக சென்றால், நமது தேவைக்கு ஏற்ப சிறந்த திட்டத்தை அவர்கள் அறிமுகம் செய்து முதலீடு செய்ய வைப்பர்.

பரஸ்பர நிதி திட்டத்தில் சேருவது எப்படி? இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு KYC பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கு போட்டோ,  நிரந்தர கணக்கு எண் (பான்கார்டு),  ஆதார்கார்டு, முகவரிச் சான்றிதழ், வங்கிக் கணக்கு போதுமானவை. ஒரு முறை KYC பதிவு செய்த பின்னர் பண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்துகொள்ளலாம்.

முதலீட்டாளருக்கு வங்கிக் கணக்கு, காசோலை இருக்க வேண்டும். மொபைல் பேங்க் மூலமாகவும்,  ATM Card மூலமாகவும் முதலீடு செய்ய முடியும். டிமேட் அக்கவுண்ட் இருக்க வேண்டியது அவசியமில்லை. 

பண்டுகளின் வகைகளும், தேர்வு முறையும்: ஒவ்வொரு பரஸ்பர நிதி நிறுவனமும், ஈகுவிட்டி பண்ட், டெப்ட் பண்ட், ஹைபிரட் பண்ட் (அ) பேலன்ஸ் பண்ட் ஆகிய வகைகளில் நிதிகளை (பண்ட்) நிர்வகிக்கின்றன.ஈகுவிட்டி பண்ட் என்பது, பொதுமக்களிடம் பெறும் நிதியை பங்குச்சந்தையில் பெரும்பகுதியை முதலீடு செய்யும் வகையானதாகும். இது அதிக அபாய அளவு கொண்டது.

டெப்ட் பண்ட் என்பது பொதுமக்களிடம் பெறும் நிதியை, வங்கி டெபாசிட், அரசாங்க பத்திரங்கள், தனியார் நிறுவன பத்திரங்கள், டெபன்சர்ஸ், கருவூல பில் போன்றவற்றில் முதலீடு செய்யும் வகையானது. இது அபாய அளவு மிக குறைவானதாக இருக்கும்.

ஹைபிரட் பண்ட் என்பது மேற்கூறிய இரண்டு வகையிலும், பகுதி பகுதியாக முதலீடு செய்யும் வகையானது. இது அபாய அளவு குறைவானது.

நாம் ஒரு முதலீட்டை மேற்கொள்ளும்போது, அதற்கான கால அளவை கொண்டு, பண்டை தேர்வு செய்ய வேண்டும். சில நாள்கள் முதல் சில மாதங்கள் வரை முதலீட்டை மேற்கொள்ள டெப்ட் பண்டையும், சில மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான முதலீட்டை மேற்கொள்ள ஹைபிரட் பண்ட் (அ) பேலன்ஸ்ட் பண்டையும்,  3 ஆண்டுகளுக்கு மேலாக 10 ஆண்டுகளோ, 20 ஆண்டுகளோ முதலீட்டை மேற்கொள்ள ஈகுவிட்டி பண்டையும் தேர்வு செய்யலாம். 

மேற்கண்ட பண்டுகளில், எப்போது வேண்டுமானாலும் முதலீட்டை திரும்பப்பெறக் கூடிய பண்டுகள் ஓப்பன் என்ட் பண்ட் என்று அழைக்கப்படுகின்றன. சில பண்டில் மட்டும் முதலீட்டு காலம் வரையறுக்கப்பட்டு இருக்கும். அவை குளோஸ் என்ட் பண்ட் என்று அழைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு முதலீட்டையும் நாம் திரும்பப் பெறும்போது, Securities Transaction Tax (STT) 0.025% பிடித்தம் செய்யப்படும். இந்த வரியானது டெப்ட் பண்டிற்கு மட்டும் கிடையாது.

டெப்ட் பண்டில் குறைந்தபட்ட முதலீட்டுத் தொகை ரூ.1000 என்ற அளவிலும், ஈகுவிட்டி பண்ட் மற்றும் பேலன்ஸ் பண்ட் வகைகளில், குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.5000 என்ற அளவிலும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதிகபட்ச தொகைக்கு வரையறை ஏதும் இல்லை. மாதந்தோறும் முதலீடு செய்ய குறைந்தது ஓராண்டாவது முதலீடு செய்யப்பட வேண்டும். மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.500 முதலீடு செய்யப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

பரஸ்பரநிதியில் நாம் செய்யும் முதலீட்டுக்கு நியமனதாரர் வசதி உள்ளது. 3 நியமனதாரர் வரை நியமித்துக்கொள்ளலாம்.

ஒரு பண்டில் நாம் முதலீடு செய்யும்போது நிதி ஆலோசகர் மூலம் முதலீடு செய்தால் Regular வழியிலும், நேரடியாக முதலீடு செய்தால் Direct வழியிலும் முதலீட்டை மேற்கொள்ளலாம்.மியூச்சுவல் பண்ட் நிறுவனமானது,  முதலீடு செய்யப்பட்ட தொகையில், ஆண்டுக்கு ஒரு முறை 1% முதல் 1.5% சதவீதம் வரை செலவினத் தொகை எடுத்துக்கொள்கின்றன.  ஆண்டுக்கு கூடுதலாக 1% முதல் 1.5 % வரை எடுத்துக்கொண்டு நிதி ஆலோசகருக்கு கமிஷன் தொகையாக வழங்குகின்றன. முறையான முதலீட்டு உத்திகள் இல்லாத நபர்கள், நிதி ஆலோசகரை கொண்டே முதலீடு செய்வது நல்லது.

Growth Option & Dividend Option: ஒவ்வொரு பண்டிலும் வளர்ச்சித் திட்டம் மற்றும் பங்காதாயம் வழங்கும் திட்டம் என இரண்டு திட்டங்கள் உள்ளன. வளர்ச்சித் திட்டத்தில் நாம் முதலீட்டை திரும்பப் பெறும் வரையிலும் நமது முதலீடு வளர்ந்து கொண்டே செல்லும். பங்காதாய திட்டத்தில் அந்த பரஸ்பர நிதி நிறுவனமானது ஒரு  குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறையோ அல்லது பண்ட் சிறப்பான வளர்ச்சி பெற்ற நேரத்திலோ நமது முதலீட்டிலிருந்து ஒரு சிறிய தொகையை எடுத்து நமக்கு வழங்கும். நமது தேவையை அடிப்படையாக கொண்டு இதில்  Growth Option & Dividend Option திட்டத்தை தேர்வு செய்யலாம்.

பரஸ்பர நிதிநிறுவனத்தின் மூலம் முதலீடு செய்த இரண்டு நாள்களிலேயே முதலீட்டிற்கான கணக்கு அறிக்கை  (Account statement) நமது ஈமெயில் முகவரிக்கு அனுப்பப்படும். மேலும் சில நாள்களில் கணக்கு அறிக்கை அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.  

ஈகுவிட்டி பண்டின் வகைகள்:

Large Cap Fund: 10ஆயிரம் கோடி மற்றும் அதற்கு மேல் மூலதன பங்குச் சந்தையை கொண்ட நிறுவன பங்கில் முதலீடு செய்யும் பண்ட் ஆகும். இதில் 3 முதல் 5 ஆண்டுகள் வரை நமது முதலீட்டுக் காலத்தை நிர்ணயம் செய்து கொள்ளலாம். இதில் ஆண்டுக்கு 10% முதல் 20% வரை வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

Mid Cap Fund:  2 முதல் 10 கோடி வரை மூலதன பங்குச் சந்தையை கொண்ட நிறுவன பங்கில் முதலீடு செய்யும் பண்ட் ஆகும்.  இதில் 3 முதல் 5 ஆண்டுகள் வரை நமது முதலீட்டுக் காலத்தை நிர்ணயம் செய்து கொள்ளலாம். இதில் ஆண்டுக்கு 10% முதல் 25% வரை வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

Small Cap Fund: 2 கோடிக்கும் குறைவான மூலதன பங்குச் சந்தையை கொண்ட நிறுவன பங்கில் முதலீடு செய்யும் பண்ட் ஆகும். இதில் 5ஆண்டுகளுக்கு மேலாக நமது முதலீட்டுக் காலத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம். இதில் ஆண்டுக்கு 10% முதல் 30 % வரை வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

Multi Cap Fund: மேற்கூறிய அனைத்து விதமான நிறுவனங்களின் பங்கில் முதலீடு செய்யும் பண்ட் ஆகும். இதில் 3 முதல் 5 ஆண்டுகள் வரை நமது முதலீட்டுக் காலத்தை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.  இதில் ஆண்டுக்கு 10% முதல் 25% வரை வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

Sector Fund: ஒரு குறிப்பிட்ட துறையை சார்ந்த மேற்குறிப்பிட்ட பெரிய, சிறிய நடுத்தர நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்யும் பண்ட். இது மிக அபாயகரமானது. புதிய முதலீட்டாளர்கள் இவ்வகை பண்டை தவிர்ப்பது நல்லது.

Childrens Gift Fund  வகைகள்: இது ஒரு பங்குச்சந்தை முதலீட்டு பண்ட் வகையைச் சார்ந்தது. இருப்பினும் இது Hybrid (or) Balance Fund  ஆகவே உள்ளது. இதில் முதலீடானது குழந்தைகளின் பெயரிலேயே செய்ய முடியும். இதில் Lock In திட்டத்தில் முதலீடு செய்தால், குழந்தை 18 வயது பூர்த்தியான பின்பே முதலீட்டை திரும்பப் பெற முடியும். இதன் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கும் 10% முதல் 20% வரை இருக்கும்.

ELSS Fund  வகைகள்: அரசு ஊழியர்கள், மாத ஊதியம் பெறுபவர்கள் வருமான வரி விலக்கு பெறுவதற்கு இந்த வகை பண்டுகளில்தான் முதலீடு செய்ய வேண்டும். வரம்புக்கு மேல் ரூ.1.5 லட்சம் வரை உள்ள வருமானத்தை பண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் வருமானவரி விலக்கு பெறலாம். இதன் வளர்ச்சி விகிதம் 10% முதல் 20% வரை இருக்கும்.

Retirement Fund வகைகள்: இதுவும் ஒரு பங்குச்சந்தை முதலீடு பண்ட் தான். இதில் நாம் முதலீடு செய்தால் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட பணத்தை பெற்று, முதலீட்டையும் வளர்ச்சியடையச் செய்யலாம். 
 

பரஸ்பர நிதி: வழிகாட்டிகள்

இணையதளங்கள்:camsonline.com, valueresearchonline.com, moneycontrol.com, economictimes.com, crisil.com, fundsindia.com  
மொபைல் "ஆப்'கள்: ET MONEY, MY FUNDS, ASSET PLUS, goMF

பரஸ்பர நிதி முதலீடு குறித்து ஆலங்குளத்தைச் சேர்ந்த நிதி ஆலோசகர் ம. ஞானகண்ணன் கூறியது: பரஸ்பர நிதியில் ஈகுவிட்டி பண்டில் முதலீடு செய்வது நிலங்கள் வாங்கிப் போடுவதற்கு சமமானது. சுமார் 10 ஆண்டுகளில் 4 மடங்கு வரையிலும், சுமார் 20 ஆண்டுகளில் 10 முதல் 15 மடங்கிற்கும் நமது முதலீடு உயரும் வாய்ப்பு உள்ளது. 

நாம் வங்கிகளில் செய்யும் முதலீடுகள், அஞ்சல் நிலையத்தில் செய்யும் முதலீடுகள் போன்றவற்றின் மூலம் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் வட்டி பெறும் போது, வருமானவரி கணக்கு தாக்கல் கண்டிப்பாக செய்ய வேண்டும். ஆனால் மியூச்சுவல் பண்டில், 5 ஆண்டுகளுக்கும் மேலான முதலீட்டிலிருந்து பெறப்படும் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் கூட வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com