இந்தியாவில் மின்சார வாகனங்களின் அறிமுகத்துக்கு மத்திய அரசின் தெளிவான கொள்கைகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக ரெனோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரெனோ இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சுமித் சாஹ்னி திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
ரெனோ உலகளாவிய நிறுவனம். எனவே, மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கான நவீன தொழில்நுட்பம் மற்றும் அதற்கு தேவையான வசதிகள் அனைத்தும் எங்களிடம் ஏற்கெனவே உள்ளன. ஆனால், இந்தியாவில் அந்த வகையான வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன், மின்சார வாகனங்களுக்கான அரசின் கொள்கைகள் குறித்து தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகி உள்ளது.
அப்போதுதான் அதற்கேற்ற வகையில் நிறுவனம் முதலீடுகளை மேற்கொள்ள முடியும். மின்சார வாகன பிரிவில் இந்தியாவில் களமிறங்க முடிவெடுப்பதற்கு முன்னதாக, அதன் தயாரிப்புகளுக்கான உள்கட்டமைப்புகளில் மத்திய அரசின் உதவி மற்றும் மின்னேற்று நிலைய (சார்ஜிங் ஸ்டேஷன்) வசதிகள் உள்ளிட்டவை தொடர்பாக தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியுள்ளது என்றார் அவர்.
இந்தியாவில் பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மோட்டார் வாகன கண்காட்சியில் ரெனோ நிறுவனம் அதன் மின்சார வாகன தயாரிப்புகளை காட்சிப்படுத்தவுள்ளது.