தனது பயணியர் வாகனங்களில் விலைகளை ரூ.60,000 வரை உயர்த்தவிருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் இந்த விலையேற்றம் இருக்கும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், ரூ.2.28 லட்சம் விலை கொண்ட சிறிய வகைக் காரான நேனோ ஜென் எக்ஸ் முதல் ரூ.17.42 லட்சம் விலை கொண்ட துள்ளல் வகைக் காரான ஹெக்ஸா வரையில் பல்வேறு பிரிவுகளில் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்தக் கார்களின் விலைகளை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அதிகரிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதிகப்பட்சமாக ரூ.60,000 வரை விலை உயர்வு இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
உற்பத்திச் செலவுகள் அதிகரித்து வருவது உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரக் காரணங்களால் கார்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, நிறுவனத்தின் பயணியர் வாகனப் பிரிவுத் தலைவர் மயங்க் பாரீக் தெரிவித்தார்.
விலைகள் சற்று அதிகரிக்கப்பட்டாலும், நிறுவனத்தின் டியாகோ, ஹெக்ஸா, டைகோர், நெக்ஸான் ஆகிய கார்களின் விற்பனை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையிலேயே இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.