நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் நுகர்வோர் சாதனங்கள் விற்பனை சூடுபிடிக்கவில்லை என்பது ஆய்வொன்றின் மூலமாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து நுகர்வோர் சாதனங்கள் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (சிஇஏஎம்ஏ) தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் வாஷிங் மெஷின் தவிர்த்து இதர நுகர்வோர் சாதனங்கள் விற்பனை அனைத்தும் மந்த நிலையிலேயே இருந்தது. அதிலும் குறிப்பாக, டிவி மற்றும் ஏசி விற்பனை வளர்ச்சி பின்னடைவைக் கண்டுள்ளது. அதேசமயம், ஃபிரிட்ஜ் விற்பனை அதிக ஏற்ற இறக்கமின்றி காணப்பட்டது.
பண்டிகை காலத்தையொட்டி கடந்த அக்டோபர் மாதத்தில் நுகர்வோர் சாதன விற்பனையானது 3-4 சதவீதம் என்ற அளவில் ஒற்றை இலக்க வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது.
அதேபோன்று, செப்டம்பர் மாதத்திலும் வாஷிங் மெஷின் தவிர்த்த இதர நுகர்வோர் சாதனங்கள் விற்பனை விறுவிறுப்பாக இல்லை. அதிலும், குறிப்பாக, சில நுகர்வோர் சாதனங்கள் விற்பனை கடந்தாண்டைக் காட்டிலும் சரிவை சந்தித்துள்ளது.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலுக்குப் பிறகு நடப்பாண்டில் தான் நுகர்வோர் சாதன துறை இரட்டை இலக்க வளர்ச்சி காணும் என்று நம்பப்பட்டது. ஆனால், இந்த ஆசையை ரூபாய் மதிப்பு சரிவு நிராசையாக மாற்றிவிட்டது. அண்மைக் காலமாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்டு வரும் திடீர் சரிவு என்பது நிறுவனங்களின் மூலப்பொருள்களின் செலவுகளை வெகுவாக அதிகரித்து விட்டது. இந்த விலை உயர்வு சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும் வகையில் நுகர்வோர் சாதன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை கணிசமாக அதிகரித்தன. இது, நுகர்வோர் சாதன துறையின் விற்பனையில் பின்னடைவு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகி விட்டது என்று அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, சிஇஏஎம்ஏ கூட்டமைப்பின் தலைவர் பொறுப்புக்கு புதிதாக கமல் நந்தி தேர்வாகியுள்ளார். தற்போது இத்துறைக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்று புதிய தலைவர் கமல் நந்தி தெரிவித்துள்ளார்.