நாட்டின் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு ஏப்ரல்-செப்டம்பர் மாத கால அளவில் 5.12 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
முக்கிய துறைமுகங்கள் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான கால அளவில் 34.32 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளன. கடந்த நிதியாண்டில் இதே கால அளவில் இது 32.65 கோடி டன்னாக இருந்தது. ஓராண்டு காலத்தில் துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 5.12 சதவீதம் அதிகரித்துள்ளது.
சரக்குகளை கையாண்டதில் பாரதீப், விசாகப்பட்டினம், காமராஜர் உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்கள் நேர்மறை வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. அதிகபட்சமாக காமராஜர் துறைமுகம் சரக்குகளை கையாண்டதில் 19.66 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, கொச்சி (11.51%), பாரதீப் (11.12%), ஹால்டியா (10.07%), தீனதயாள் (10.03%), ஆகியவை உள்ளன. மதிப்பீட்டு காலத்தில், தீனதயாள் (கண்ட்லா) துறைமுகம் அளவில் அடிப்படையில் 5.86 கோடி டன் சரக்கை கையாண்டு முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, பாரதீப், ஜேஎன்பிடி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்கள் உள்ளதாக கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.