ஐந்து வாரங்களாக பங்குச் சந்தைகள் தொடர் சரிவைக் கண்டு வந்த நிலையில் கடந்த வார வர்த்தகத்தில் முன்னேற்றத்தை சந்தித்தன. கடந்த வாரத்தில் பங்குச் சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கம் காணப்பட்டது. மொத்தமுள்ள ஐந்து வர்த்தக தினங்களில் மூன்று கரடியின் பிடியிலேயே சிக்கித் தவித்தன.
இருப்பினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தது, வரலாற்று சரிவிலிருந்து ரூபாய் மதிப்பு மீண்டது உள்ளிட்ட நிகழ்வுகள் பங்குச் சந்தைகளுக்கு சாதகமாக அமைந்தன.
இதனால் முதலீட்டாளர்கள், கச்சா எண்ணெய், வங்கி, மோட்டார் வாகனத் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை அதிக அளவில் வாங்கி குவித்தனர். இதையடுத்து, பங்குச் சந்தைகள் வார அளவில் 1.5 சதவீத ஏற்றத்தைக் கண்டன. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 357 புள்ளிகள் அதிகரித்து 34,733 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 156 புள்ளிகள் உயர்ந்து 10,472 புள்ளிகளில் நிலைத்தது.
வரும் வாரத்தில் பங்குச் சந்தையின் போக்கை தீர்மானிப்பதில் நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் முக்கிய பங்கு வகிக்கும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.