வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு தேவையான மூலதனத்தை உறுதி செய்ய நடவடிக்கை: ஜேட்லி
வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு போதுமான மூலதனம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி திங்கள்கிழமை தெரிவித்தார்.
வங்கி சாரா நிதி நிறுவனங்களிடையே ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியின் எதிரொலியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் அத்துறை சார்ந்த பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்தனர். இதனால், வர்த்தகத்தின் இடையே பங்குச் சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. குறிப்பாக, வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், திங்கள்கிழமை பங்கு வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பாக முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் ஜேட்லி சுட்டுரைப் பதிவை வெளியிட்டார். அதில், கூறியிருப்பது:
வங்கி சாரா நிதி நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றுக்குத் தேவையான மூலதனம் வழங்கப்படுவதை மற்றும் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். எனவே, முதலீட்டாளர்கள் பதற்றமடையத் தேவையில்லை என்று ஜேட்லி தெரிவித்துள்ளார்.