வங்கிகள் இறக்குமதிக்கு வழங்கும் உத்தரவாத கடிதங்களுக்கு தடைவிதித்து ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கி இறக்குமதிக்கு அளித்த 'எல்ஓசி' எனப்படும் வங்கி உத்தரவாத கடிதத்தை தவறாக பயன்படுத்தி நீரவ் மோடி ரூ.13,000 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதையடுத்து ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வங்கிகள் இறக்குமதி கடனுக்கு அளிக்கும் லெட்டர் ஆஃப் அண்டர்டேக்கிங் (எல்ஓயு) மற்றும் லெட்டர் ஆஃப் கம்ஃபோர்ட் (எல்ஓசி) உத்தரவாத கடிதங்களை நடைமுறை பயன்பாட்டிலிருந்து நீக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எனவே, இனி அதுபோன்ற கடிதங்களை வங்கிகள் வழங்க தடைவிதிக்கப்படுகிறது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.
அதேசமயம், விதிமுறைகளுக்கு உட்பட்டு இறக்குமதி கடன்களுக்காக அளிக்கப்படும் லெட்டர் ஆஃப் கிரிடிட் மற்றும் பேங்க் கியாரண்டி ஆகியவை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என ரிசர்வ் வங்கி அந்த அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.