வங்கிக்கணக்கில் இருந்து ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கு அதிகமாக பணம் எடுத்தால் 2% டி.டி.எஸ் வரி பிடித்தம் செய்யப்படும் என்ற விதிமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர், கடந்த ஜூலை மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வருமானவரித்துறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன.
அதன்படி, வங்கிக்கணக்கில் இருந்து ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கு அதிகமாக பணம் எடுத்தால், அதன்பின்னர் நீங்கள் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் 2% டி.டி.எஸ் வரி பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதாவது, தனிப்பட்ட நபர் ஒரு வங்கிக்கணக்கு, பல வங்கிக்கணக்கு மற்றும் அஞ்சல் அலுவலகக் கணக்கு ஆகியவற்றில் இருந்து மொத்தமாக 1 கோடி ரூபாய்க்கு அதிகமாக பணம் எடுக்கும் பட்சத்தில், அதன்பின்னர் நீங்கள் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் 2% டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்படும். இந்த விதிமுறையானது ஞாயிற்றுக்கிழமை(செப்டம்பர் 1ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.
ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை அதிகரிக்கவும், பணமில்லா பரிவர்த்தனையை குறைக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.