பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய வங்கிகளின் கடன் வழங்கல் நடவடிக்கைகளுக்கு நேர்மறை தரக் குறியீட்டை மூடிஸ் வழங்கியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளவேண்டிய கட்டுப்பாட்டு பட்டியலிலிருந்து (பிசிஏ) இந்த வங்கிகள் வெளியேறியதையடுத்து மூடிஸ் நிறுவனம் இந்த தரக்குறியீட்டை வழங்கியுள்ளது.
இதுகுறித்து மூடிஸ் நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வாராக் கடனில் சிக்கி மூலதனம் பின்னடைவைச் சந்தித்ததையடுத்து, பேங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் மற்றும் பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா ஆகிய மூன்று பொதுத் துறை வங்கிகளை ரிசர்வ் வங்கி பிசிஏ பட்டியலில் சேர்த்தது. அந்த வங்கிகள் கடன் வழங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து, டிசம்பர் காலாண்டு முடிவுகளில் அந்த வங்கியின் செயல்பாடு மேம்பட்டுள்ளதுடன், மூலதனமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதன் எதிரொலியாக, கடந்த ஜனவரி 31-ஆம் தேதி பிசிஏ பட்டியலிலிருந்து பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய வங்கிகளை ரிசர்வ் வங்கி நீக்கியது. இந்த மூன்று பொதுத் துறை வங்கிகளின் சொத்து மதிப்பு முன்னேற்றம் கண்டுள்ளதையடுத்து தற்போது கடன் வழங்கல் நடவடிக்கையில் நேர்மறை என்ற தரக்குறியீடு வழங்கப்படுகிறது என மூடிஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.