சாதகமான உலக நிலவரங்களையடுத்து இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இருநாட்டு பிரதிநிதிகளும் பெய்ஜிங் நகரில் அடுத்த வாரம் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளனர். இந்த சந்திப்பில் சாதகமான முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பால் முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீட்டை போட்டி போட்டு அதிகரித்தனர்.
குறிப்பாக, தொலைத்தொடர்பு, உலோகம், வங்கி துறை பங்குகளை அதிக அளவில் வாங்கி குவித்தனர். இதையடுத்து, அத்துறைகளின் குறியீட்டெண் 2 சதவீதம் வரை உயர்ந்தது.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், யெஸ் வங்கி, பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி பங்குகளின் விலை 3.05 சதவீதம் வரை அதிகரித்தது.
பொதுத் துறை வங்கிகளான பிஎன்பி, யூனியன் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, ஆந்திரா வங்கி, எஸ்பிஐ பங்குகளின் விலை 4 சதவீதம் வரை உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 181 புள்ளிகள் அதிகரித்து 35,695 புள்ளிகளில் நிலைத்தது. முதலீட்டாளர்களின் உற்சாகத்தால் வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 350 புள்ளிகள் வரை உயர்ந்தது.
தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 55 புள்ளிகள் உயர்ந்து 10,727 புள்ளிகளில் நிலைத்தது.