நாட்டின் நேரடி வரி வசூல் கடந்தாண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 14.1 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய நிதி அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:
கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத கால அளவில் நாட்டின் நேரடி வரி வசூல் ரூ.8.74 லட்சம் கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வரி வசூல் 14.1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இதே கால அளவில், கூடுதல் வரி செலுத்தியவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும் ரீபண்ட் தொகை ரூ.1.30 லட்சம் கோடியாக காணப்பட்டது. முந்தைய 2017-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ரீபண்ட் தொகையுடன் ஒப்பிடுகையில் இது 17 சதவீதம் அதிகமாகும்.
மொத்த நேரடி வரி வசூலில் முன்கூட்டிய வரியாக மட்டும் ரூ.3.64 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. முந்தைய 2017-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 14.5 சதவீத வளர்ச்சியாகும்.
ரீபண்ட் தொகைக்குப் பிறகான நிகர அளவிலான நேரடி வரி வசூல் 13.6 சதவீதம் உயர்ந்து ரூ.7.43 லட்சம் கோடியாக காணப்பட்டது.
நடப்பு 2018-19-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட மொத்த நேரடி வரி வசூல் (ரூ.11.50 லட்சம் கோடி) இலக்கில் நிகர நேரடி வருவாய் வசூல் 64.7 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கான மொத்த வரி வசூல் 14.8 சதவீதமாகவும், தனிநபர் வருமான வரி 17.2 சதவீதமாகவும் இருந்தது.
ரீபண்ட் அளிப்புக்குப் பிறகான நிகர அளவிலான நிறுவன வரி வசூல் 16 சதவீதமாகவும், தனிநபர் வருமான வரி 14.8 சதவீதமாகவும் இருந்தது என நிதி அமைச்சகம் அந்த அறிக்கையில்
தெரிவித்துள்ளது.