பொதுத் துறையைச் சேர்ந்த ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பங்குகளை திரும்பப் பெறும் திட்டம் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு திங்கள்கிழமை வழங்கிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
ஒரு பங்கின் விலை ரூ.159 என்ற அடிப்படையில் 25.29 கோடி பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்துக்கு ஓஎன்ஜிசி-யின் இயக்குநர்கள் குழு கடந்தாண்டு டிசம்பர் 20-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
அதிக ரொக்க கையிருப்பை கொண்ட பொதுத் துறை நிறுவனங்கள் பங்குகளை திரும்பப் பெறும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் வலியுறுத்தலுக்கு ஏற்ப ஓஎன்ஜிசி இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.
அதன்படி, வரும் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கவுள்ள பங்குகளை திரும்பப் பெறும் திட்டம் பிப்ரவரி 11-ஆம் தேதியுடன் முடிவடையும் என்று ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.
ஓஎன்ஜிசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 65.54 சதவீத பங்கு மூலதனம் உள்ளது.
எனவே, இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.2,640 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.