இன்னும் ஒரு சில தினங்களில் டிராய் புதிய உத்தரவு அமலுக்கு வரவுள்ள நிலையில் டிடிஹெச் ,கேபிள் கட்டணங்கள் குறையுமா அல்லது கூடுமா என்ற குழப்பம் மக்களிடையே தீர்ந்தபாடில்லை. ஒரு சிலர் கேபிள் கட்டணம் தற்போது செலுத்தவதை விட ரூ.1,000 வரை அதிகரிக்கும் என்கிறார்கள். இன்னும் ஒரு சிலரோ பார்க்காத சேனலுக்கும் கூட இதுவரை பணத்தை கட்டி வந்த நிலையில் டிராயின் இந்த புதிய உத்தரவு நிச்சயம் அதற்கு தீர்வு கண்டு கட்டணத்தை வெகுவாக குறைக்க உதவும் என்று அடித்து கூறுகிறார்கள்.
டிராயின் புதிய உத்தரவுப்படி அடிப்படை கட்டணம் ரூ.130 உடன் 18 சதவீத ஜிஎஸ்டி சேர்த்து புதிய கட்டணமாக ரூ.154 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.130 கட்டணத்தில் வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களை தேர்ந்தெடுக்க முழு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, இலவச சேனல் தேவை இல்லையெனில் அந்த தொகைக்கேற்ப கட்டண சேனல்களையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என டிராய் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் அழுத்தமான கோரிக்கையை அடுத்தே அண்மையில்தான் இந்த புதிய உத்தரவை அந்த அமைப்பு பிறப்பித்தது.இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் சேனல்களை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது.
ஆபரேட்டங்கள் 300-க்கும் மேற்பட்ட சேனல்களை ஒளிபரப்பிய நிலையிலும், 50 சதவீத தொலைக்காட்சி பார்வையாளர்கள் 30 சேனல்களை மட்டும் தான் பார்க்கின்றனர் என்பது பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில் (பிஏஆர்சி) இந்தியா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதிலிருந்து, பொதுமக்கள் பார்க்காத, பார்க்க விரும்பாத சேனல்களையே ஆபரேட்டர்கள் அதிக அளவில் ஒளிபரப்பி வந்தது நிரூபணமாகியுள்ளது.
சேனல்கள் தங்களது விருப்பம்போல் கட்டணங்களை நிர்ணயித்து வந்த நிலையில், டிராய் அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. குறிப்பாக, சோனி டென் 1 ஹெச்டி சேனலை பார்ப்பதற்கு மதாந்திர கட்டணமாக வாடிக்கையாளர்கள் ரூ.75-ஐ செலுத்தி வந்தனர். இந்த நிலையில், எந்தவொரு சேனலும் ரூ.19-க்கு மேல் மாதாந்திர கட்டணத்தை நிர்ணயிக்க கூடாது என டிராய் கடிவாளம் போட்டுள்ளது கேபிள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது.
மேலும், தற்போது வாடிக்கையாளர்கள் தங்களது தேவைக்கு ஏற்ற சேனல்களை சிக்கனமாக தேர்ந்தெடுக்கும்போது கட்டணம் முன்பை விட குறைவதற்கே அதிக வாய்ப்பு என்பது பெரும்பாலானோரின் கருத்து. இருப்பினும், எந்தவொரு திட்டமும் நடைமுறைக்கு வந்த பின்புதான் அதன் சாதக பாதக அம்சங்கள் வெளிப்படும் என்பது எதார்த்தமான உண்மை.