பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் இந்தியாவின் முதல் காலாண்டு லாபம் இருமடங்கு உயர்ந்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி செபியிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.11,526.95 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.10,631.02 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.95.11 கோடியிலிருந்து இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.242.62 கோடியாகி உள்ளது.
வழங்கப்பட்ட மொத்த கடனில் நிகர வாராக் கடன் விகிதம் 8.45 சதவீதத்திலிருந்து கணிசமாக குறைந்து 5.79 சதவீதமாகவும், மொத்த வாராக் கடன் விகிதம் 16.66 சதவீதத்திலிருந்து சற்று குறைந்து 16.50 சதவீதமாகவும் ஆகியுள்ளது.
வாராக் கடன் குறைந்துள்ள போதிலும், அதன் இடர்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்படும் தொகை முதல் காலாண்டில் ரூ.9,255.60 கோடியாக இருந்தது என பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.