இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்று உச்சமான 42,602 கோடி டாலரை நெருங்கி வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி மேலும் கூறியுள்ளதாவது: அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு ஏற்றம் கண்டு வருவதையடுத்து, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஜூன் 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 170 கோடி டாலர் (ரூ.11,900 கோடி) அதிகரித்து 42,355 கோடி டாலரைத் (ரூ.29.64 லட்சம் கோடி) தொட்டுள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பு 180 கோடி டாலர் உயர்ந்து 42,185 கோடி டாலராக காணப்பட்டது.
கணக்கீட்டு வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பாக உள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 166 கோடி டாலர் உயர்ந்து 39,580 கோடி டாலராக இருந்தது. அதேசமயம், தங்கத்தின் கையிருப்பு மாற்றம் எதுவுமின்றி 2,295 கோடி டாலர் என்றஅளவிலேயே உள்ளது.
சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் 61 லட்சம் டாலர் அதிகரித்து 144.9 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 14 லட்சம் டாலர் உயர்ந்து 333.4 கோடி டாலராகவும் இருந்தது என புள்ளிவிவரத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி வாரத்தில்தான் அந்நியச் செலாவணி கையிருப்பானது வரலாற்று உச்சமாக 42,602 கோடி டாலரை எட்டியிருந்தது. அதன் பிறகு தற்போதுதான் செலாவணி கையிருப்பானது இந்த அளவுக்கு நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.