வரும் ஜூலை-செப்டம்பர் காலாண்டிற்கான சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு, 0.1 சதவீதம் குறைத்துள்ளது.
பொது சேம நல நிதி (பிபிஎஃப்), தேசிய சேமிப்பு பத்திரம் (என்எஸ்சி) உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான ஆண்டு வட்டி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதம் குறைக்கப்பட்டு 7.9 சதவீதமாக நிதி அமைச்சகம் நிர்ணயித்துள்ளது.
அதேபோன்று, கிஸான் விகாஸ் பத்திரங்களுக்கான 113 மாத முதிர்வுக்கான வட்டி விகிதமும் 7.7 சதவீதத்திலிருந்து 7.6 சதவீதமாக குறைத்துள்ளது.
பெண்குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதமும் 8.5 சதவீதத்திலிருந்து 8.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இவைதவிர, 1-3 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும் குறித்த கால டெபாசிட்டுகளுக்கான வட்டி 6.9 சதவீதமாகவும், ஐந்தாண்டு குறித்த கால டெபாசிட்டுகளுக்கான வட்டி 7.7 சதவீதமாகவும், தொடர் வைப்பு நிதிக்கான வட்டி 7.2 சதவீதமாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும், மூத்த குடிமக்களுக்கான ஐந்தாண்டு சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 8.7 சதவீதத்திலிருந்து 8.6 சதவீதமாக குறைப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அதேசமயம், சேமிப்பு கணக்கில் வைக்கப்படும் தொகைக்கு ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கும் என நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இதர திட்டங்களுடன் ஒப்பிடும்போது வங்கி டெபாசிட்டுக்கான வட்டி மிகவும் குறைந்த அளவில் இருப்பதாக கோட்டக் மஹிந்திரா வங்கியின் தலைவர் உதய் கோட்டக் அண்மையில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது: பங்குசார்ந்த முதலீடுகள் பல்வேறு நிலைகளில் வரிவிதிப்புக்குள்ளாகிறது. ஆனால், அதேசமயம், வங்கி டெபாசிட்டுகளை காட்டிலும் என்எஸ்சி, பிபிஎஃப் திட்டங்களின் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. இதனால், சில்லறை முதலீட்டாளர்கள் இதுபோன்ற கடன் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்கின்றனர். இது, புதிய தொழில்களை கட்டமைப்பதற்கும், விரிவுபடுத்துவதற்கும் தேவையான மூலதனத்தை அதிக இடர்பாடின்றி பெற உதவுகிறது என்கிறார் உதய் கோட்டக்.