சென்னை: சுந்தரம்-கிளேட்டன் நிறுவனம் அமெரிக்காவில் தனது புதிய ஆலையை திறந்துள்ளது. இந்நிறுவனம் வெளிநாட்டில் அமைக்கும் முதல் ஆலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சுந்தரம்-கிளேட்டன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நிறுவனத்துக்கு வட அமெரிக்கா மிக முக்கிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது. இதனை உணர்ந்தே, அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ரிட்ஜ்வில்லி தொழிற் பூங்காவில் 50 ஏக்கர் பரப்பளவில் இப்புதிய வார்ப்பட ஆலை (படம்) அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.630 கோடி (9 கோடி டாலர்) முதலீட்டு திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலையின் மூலம் முதல் ஆண்டில் 1,000 டன் வார்ப்பட பொருள்கள் தயாரிக்கப்படவுள்ளன. ஐந்தாண்டுகளில் இது 10,000 டன்னாக அதிகரிக்கப்படும். இதன் மூலம், வட அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையினை அளிக்க முடியும்.
தற்போதைய நிலையில், நிறுவனத்தின் ஏற்றுமதியில் 60 சதவீத பங்களிப்பையும், வருவாயில் 40 சதவீத பங்களிப்பையும் அமெரிக்கா வழங்கி வருவதாக அந்த அறிக்கையில் சுந்தரம்-கிளேட்டன் தெரிவித்துள்ளது.