கடந்த 2018-19 நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகள் ரூ.1.2 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்களை வசூல் செய்துள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
திவால் சட்டத்தின் உதவியால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் வசூல் நடவடிக்கை கடந்த நிதியாண்டில் மிகவும் வேகமெடுத்து காணப்பட்டது.
அதன் பயனாக, கடந்த 2018-19 நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகள் ரூ.1.2 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்களை வசூல் செய்துள்ளன. குறிப்பாக, கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டும் ரூ.60,713 கோடி மதிப்புக்கு வாராக் கடன்களை வங்கிகள் வசூல் செய்துள்ளன.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் (என்சிஎல்டி) மூலமாக மட்டும் ரூ.55,000 கோடி வாராக் கடன் வசூலாகியுள்ளது. என்சிஎல்டி-க்கு பரிந்துரைக்கப்பட்ட சில பெரிய கணக்குகளின் வாராக் கடன் சிக்கலுக்கு தீர்வு காணப்படாததையடுத்து நடப்பாண்டில் வாராக் கடன் வசூல் இலக்கான ரூ.1.80 லட்சம் கோடியை எட்ட இயலவில்லை. இருப்பினும், நடப்பாண்டில் இந்த கணக்குகளுக்கு தீர்வு காணப்படும்.
வங்கிகளின் தீவிர வசூல் நடவடிக்கைகளின் காரணமாகவே 2017-18-இல் ரூ.74,562
கோடியாக மட்டுமே இருந்த வாராக் கடன் வசூல் நடப்பாண்டில் ஏறத்தாழ இரண்டு மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல நிறுவனங்களின் வாராக் கடன் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்ட போதிலும், இன்னும் எஸ்ஸார் ஸ்டீல் மற்றும் பூஷண் பவர் & ஸ்டீல் ஆகிய இரு நிறுவனங்களின் அதிக மதிப்பிலான வாராக் கடன் சிக்கலுக்கு தீர்வு காணப்படவில்லை. நடப்பாண்டில் இதற்கு உரிய தீர்வு காணப்பட்டு அந்நிறுவனங்களிடமிருந்து ரூ.50,000 கோடி மதிப்பிலான வாராக் கடன் வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.