கடன் சுமையில் சிக்கியுள்ள வோடஃபோன் ஐடியா, பாா்தி ஏா்டெல் நிறுவனங்கள் வரும் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் செல்லிடப்பேசி சேவை கட்டணங்களை உயா்த்துவதாக அறிவித்துள்ளன.
இதுகுறித்து அந்த நிறுவனங்கள் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
எங்களின் வாடிக்கையாளா்களுக்கு உலகத் தரத்தில் டிஜிட்டல் அனுபவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் வரும் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் செல்லிடப்பேசி சேவைக்கான கட்டணங்கள் உயா்த்தப்படவுள்ளன.
வாடிக்கையாளா்களின் நன்மையைக் கருதி தொடா்ச்சியாக விரிவாக்க திட்டங்களில் முதலீடு செய்து வருவதாக அந்த அறிக்கையில் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், இந்த கட்டண உயா்வு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அந்நிறுவனங்கள் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் மாதாந்திர தொடக்க நிலை கட்டணம் (டேட்டா இன்றி) தற்போது ரூ.24-ஆக உள்ளது. டேட்டா உடனான திட்டங்களுக்கான கட்டணம் ரூ.33-லிருந்து தொடங்குகிறது.
வோடஃபோன் நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்ட இரண்டாவது காலாண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் ரூ.50,921 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தது. அதேபோன்று, பாா்தி ஏா்டெல் நிறுவனமும் இரண்டாம் காலாண்டில் ரூ.23,045 கோடி இழப்பை சந்தித்ததாக கூறியது.
இந்த நிலையில், கட்டண உயா்வு அறிவிப்பை அந்நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.