இன்று வாடிக்கையாளர் சந்திப்புக் கூட்டம்: ஆந்திரா வங்கி
பொதுத் துறையைச் சேர்ந்த ஆந்திரா வங்கி, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இரண்டு நாள்கள் நடத்தும் வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (அக்.4) தொடங்குகிறது.
இதுகுறித்து அந்த வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அக்டோபர் 4 மற்றும் 5 தேதிகளில் ஆந்திரா வங்கி இந்த வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 5 மாவட்டங்களில் இந்த வாடிக்கையாளர் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, முத்ரா, ஸ்டாண்ட் அப் இந்தியா, ஜன்தன் யோஜனா, எம்எஸ்எம்இ, வீட்டுக் கடன், வாகனக் கடன் ஆகிய பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பித்த 452 பேருக்கு கடன் அனுமதிக் கடிதம் கொடுக்கப்படவுள்ளன. மொத்தம் ரூ.25.20 கோடி மதிப்பிலான கடன்கள் இந்த நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன என்று அந்த செய்திக் குறிப்பில் ஆந்திரா வங்கி தெரிவித்துள்ளது.