மத்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை (அக்.4) வெளியிடவுள்ள நிதிக் கொள்கையில் ரெப்போ வட்டி விகிதங்களை மீண்டும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால் நிதிக் கொள்கையில் வட்டிக் குறைப்புக்கு வாய்ப்புகள் உள்ளதை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஏற்கெனவே சூசகமாகத் தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய நிலையில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயமும் ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்களால், ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிடவுள்ள நிதிக் கொள்கையில் ரெப்போ வட்டி விகிதங்களை மீண்டும் குறைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி, நடப்பு ஆண்டில் தொடர்ச்சியாக நான்கு முறை 1.1 சதவீதம் அளவுக்கு வட்டியைக் குறைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவீதம் குறைக்கப்பட்டு 5.40 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.