இந்தியன் வங்கியின் நிகர லாபம், நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், 139 சதவீதம் வளர்ச்சி அடைந்து, ரூ.359 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் பத்மஜா சுந்துரு (படம்) தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: அவர் கூறியது: நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், வங்கியின் மொத்த வருவாய், 18 சதவீதம் உயர்ந்து, ரூ.6,045 கோடியாக அதிகரித்துள்ளது.
இது, 2018ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், 5,129 கோடி ரூபாயாக இருந்தது.
வங்கியின் செயல்பாட்டு லாபம், 26 சதவீதம் வளர்ச்சி அடைந்து, ரூ.1,502 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டில், இதேகாலத்தில் ரூ.1,191 கோடி ரூபாயாக இருந்தது.
இதேபோல, நிகர வட்டி வருவாய், 8 சதவீதம் உயர்ந்து, ரூ.1,863 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டில் இதே காலத்தில் ரூ. 1,731 கோடியாக இருந்தது.
வங்கியின் நிகர லாபம் 139 சதவீதம் வலுவான வளர்ச்சி அடைந்து, ரூ.359 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டில் இதே காலத்தில் ரூ.150 கோடியாக இருந்தது.
மொத்த வராக் கடன் அளவு 0.4 சதவீதம் உயர்ந்து, 7.20 சதவீதமாக உள்ளது. நிகர வராக் கடனின் அளவு, 0.69 சதவீதம் குறைந்து, 3.54 சதவீதமாக உள்ளது.
வங்கியின் நிகர லாபம் உயர்ந்ததற்கு, வராக் கடன் வசூல் அதிகரிப்பு, மற்றும் இதர வருவாய் அதிகரித்ததே காரணம்.
இந்தியன் வங்கி உடன், அலகாபாத் வங்கி இணைவது பலமே. வங்கிகள் இணைப்புக்கான பணிகள், சுமுகமாக நடந்து வருகின்றன. வங்கிகள் இணைப்புக்குப் பின், புதிய தொழில் நுட்பங்களில் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.