நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் செப்டம்பர் காலாண்டு லாபம் எட்டு ஆண்டுகள் காணாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா (படம்) கூறியுள்ளதாவது:
பதிவு-காப்பீட்டு கட்டணங்கள் உயர்வு, புதிய பாதுகாப்பு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் ஆகியவை வாகனங்களின் விலை அதிகரிக்க காரணமாகியுள்ளன. அதனால், விற்பனை குறைந்து மோட்டார் வாகன துறை நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்தாண்டைக் காட்டிலும் நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டு மற்றும் முதலாவது அரையாண்டில் நிறுவனத்தின் வாகன விற்பனையானது கணிசமான சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக, இரண்டாவது காலாண்டில் வாகன விற்பனை 22 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
இதையடுத்து, நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,391.1 கோடியாக குறைந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபமான ரூ.2,280.2 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 38.99 சதவீதம் சரிவாகும். கடந்த எட்டு ஆண்டுகளில் காலாண்டு லாபம் இந்த அளவுக்கு சரிவை சந்தித்தது இதுவே முதல் முறை.
இதற்கு முன்பு, கடந்த 2011-2012 நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் நிகர லாபம் ரூ.549 கோடியிலிருந்து 56 சதவீதம் குறைந்து ரூ.241 கோடியாக இருந்ததே அதிகபட்ச சரிவாக கருதப்பட்டது.
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.43,367.5 கோடியிலிருந்து சரிந்து ரூ.34,862 கோடியாகவும், நிகர லாபம் ரூ.4,295.3 கோடியிலிருந்து 35.55 சதவீதம் குறைந்து ரூ.2,767.9 கோடியாகவும் இருந்தன.
அடுத்த இரண்டு மாதங்களில் என்ன நடக்கிறது என்பதை பொருத்துதான் மோட்டார் வாகன துறையின் செயல்பாடு அமையும் என்றார் அவர்.