நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யின் சொத்து மதிப்பு ரூ.31.11 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 1956-ஆம் ஆண்டு வெறும் ரூ.5 கோடி மூலதனத்தில் எல்ஐசி நிறுவனம் துவக்கப்பட்டது. 63 ஆண்டுகளில் நிறுவனத்தின் சொத்து மதிப்பானது 31,11,847.28 கோடியை எட்டியுள்ளது. எல்ஐசியின் 32 தனிப்பட்ட திட்டங்கள் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.
நடப்பாண்டு ஜூலை இறுதி நிலவரப்படி காப்பீட்டு சந்தையில் நிறுவனத்தின் பங்களிப்பானது 73.1 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.
அதேபோன்று, 168 அலுவலகங்களுடன் தொடங்கப்பட்ட எல்ஐசி நிறுவனத்துக்கு இன்று 4,851 அலுவலகங்களும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களும் உள்ளனர். 11.79 லட்சம் முகவர்கள் மூலம் 29.09 கோடிக்கும் அதிகமான காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்துள்ளதாக அந்த அறிக்கையில் எல்ஐசி தெரிவித்துள்ளது.