யெஸ் வங்கி பங்குகளை இணை நிறுவனர் ராணா கபூரிடமிருந்து வங்குவது குறித்து டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனமான பேடிஎம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
யெஸ் வங்கியில் ராணா கபூர் மற்றும் அவருக்கு தொடர்புடைய நிறுவனங்களுக்கு சொந்தமாக 9.6 சதவீத பங்குகள் உள்ளன.
இவற்றை கையகப்படுத்துவது தொடர்பாக, பேடிஎம் நிறுவனம் முதல்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா ஏற்கெனவே பேடிஎம் பேமண்ட் வங்கியில் சொந்தமாக பங்குகளை வைத்துள்ளதால், யெஸ் வங்கி பங்குகளை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தின் கட்டமைப்பு இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைப் பொறுத்து அமையும் என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாராக் கடனுக்கு அதிக அளவிலான தொகையை ஒதுக்கியதையடுத்து யெஸ் வங்கி கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.1,506.44 கோடி இழப்பை சந்தித்தது. முந்தைய ஆண்டில் ரூ.1,179.44 கோடி லாபம் ஈட்டிய நிலையில் ஏற்பட்ட இந்த இழப்பு யெஸ் வங்கிக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.
இருப்பினும், நடப்பு நிதியாண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் யெஸ் வங்கி இழப்பிலிருந்து மீண்டு ரூ.114 கோடியை லாபமாக ஈட்டியது.