பரஸ்பர நிதி முதலீட்டாளர்கள் கணக்குகளின் எண்ணிக்கை 8.53 கோடி
சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் காணப்பட்ட போதும் ஆகஸ்ட் மாதத்தில் பரஸ்பர நிதி துறையில் 5 லட்சம் முதலீட்டாளர்கள் கூடுதலாக இணைந்ததையடுத்து அத்துறை கணக்குகளின் மொத்த எண்ணிக்கை 8.53 கோடியைத் தொட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: பரஸ்பர நிதி துறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் 44 நிறுவனங்களில் ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை 8,52,81,222-ஐ எட்டியுள்ளது. இது ஜூலை மாதத்தில் 8,48,00,409-ஆக காணப்பட்டது. ஆக, ஒரு மாதத்தில் மட்டும் பரஸ்பர நிதி திட்டங்களில் 4.81 லட்சம் கணக்குகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பங்கு சார்ந்த திட்டங்களில் 4.11 லட்சம் கணக்குகள் அதிகரித்ததையடுத்து மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 6.16 கோடியை எட்டியுள்ளது. முந்தைய ஜூன் மாதத்தில் இது 6.12 கோடியாக காணப்பட்டது.
ஆகஸ்ட் இறுதி நிலவரப்படி பரஸ்பர நிதியங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது ரூ.24.53 லட்சம் கோடியிலிருந்து அதிகரித்து ரூ.25.47 லட்சம் கோடியை எட்டியுள்ளது என பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.