இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரிக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கூறியுள்ளது. நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாகவும், 2020-ஆம் ஆண்டில் 7.5 சதவீதமாகவும் இருக்கும் என்று ஐஎம்எஃப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டுக் கூட்டத்தை முன்னிட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக இருந்தது. அப்போது சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாகும். 2019-ஆம் ஆண்டு சீனாவின் வளர்ச்சி குறைந்து 6.3 சதவீதமாக இருக்கும். இதுவே 2020-ஆம் ஆண்டில் மேலும் குறைந்து 6.1 சதவீதமாக இருக்கும். அதே நேரத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019-ஆம் ஆண்டில் 7.3 சதவீதமாகவும், 2020-ஆம் ஆண்டில் 7.5 சதவீதமாகவும் வளர்ச்சியடையும். முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவது, நுகர்வுப் பொருள்களுக்கான தேவை அதிகரிப்பு, இந்தியாவில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவை வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். அதேநேரத்தில் இந்தியாவில் நிதிக் கொள்கையில் ஏற்படும் மாற்றங்கள், வளர்ச்சி தொடர்பான இந்த கணிப்பில் வேறுவிதமான தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
இந்தியா தனது பொருளாதாரச் சீர்திருத்தங்களையும், நிதி ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளையும் தொடர வேண்டும். இதன் மூலம் நாட்டின் கடன் அளவை வெகுவாக குறைக்க முடியும். மானியங்களைக் குறைப்பது, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை வலுப்படுத்துவது ஆகியவை மிகவும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.