உணவு மற்றும் உர மானியங்களை குறைக்க இந்தியாவுக்கு ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளதாக சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐஎம்எஃப் நிதி விவகாரங்கள் துரை இணை இயக்குநர் பாலோ மவுரோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவைப் பொறுத்தவரையில் இலக்கு இல்லாமல் வழங்கப்பட்டு வரும் உணவு மற்றும் உர மானியங்களை குறைத்திட ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன. மேலும், ஜிஎஸ்டி உள்ளிட்ட, வருவாய் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நேர்மறை சீர்திருத்தத்தை கொண்டவையாகவே உள்ளன. இருப்பினும் கூட, வரி இணக்க நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு இன்னும் முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும்.
இந்தியாவில் நிதி ஒருங்கிணைப்புத் திட்டங்களுக்கு படிப்படியாக முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதமானது சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்த வளர்ச்சியானது 7 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருக்கும். வறுமையை குறைத்து அனைத்து துறையிலும் வளர்ச்சியை உறுதி செய்வதே முக்கிய நோக்கமாக உள்ளது என்றார் அவர்.
அரசு வங்கிகளின் மூலதனத்தை வலுப்படுத்த வேண்டும்: ஐஎம்எஃப் நாணய மற்றும் மூலதன சந்தை துறையின் தலைவர் அன்னா இலினா தெரிவித்ததாவது: இந்தியாவில் வாராக் கடன்கள் அளவு இன்னும் அதிகமாகவே உள்ளது. எனவே, வங்கிகளின் மூலதனத்தை அதிலும் குறிப்பாக அரசு வங்கிகளில் மூலதனத்தை அதிகரிக்கும் நடவடிக்கைக்கு ஐஎம்எஃப் ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கு, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, பொதுத் துறை வங்கிகளின் நிர்வாக கட்டமைப்பை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்றவை, சில நேர்மறையான விளைவுகளை உண்டாக்கும் என்றார் அவர்.