நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி முதல் காலாண்டில் ரூ.2,312 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
வட்டி வருமானம் அதிகரிப்பு மற்றும் வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு கணிசமாக குறைந்தது உள்ளிட்டவற்றால் பாரத ஸ்டேட் வங்கி லாப பாதைக்கு திரும்பியுள்ளது.
கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் வங்கி ரூ.4,876 கோடி நிகர இழப்பை கண்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.2,312 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
தனிப்பட்ட மொத்த வருமானம் ரூ.65,492.67 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.70,653.23 கோடியை எட்டியுள்ளது.
முதல் காலாண்டில் வாராக் கடனுக்கான ஒதுக்கீடு ரூ.16,849 கோடியிலிருந்து 35 சதவீதம் சரிந்து ரூ.10,934 கோடியாகி உள்ளது.
நிகர வட்டி வருமானம் ரூ.21,798 கோடியிலிருந்து 5.23 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.22,939 கோடியாக இருந்தது.
வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 9.95 சதவீதத்திலிருந்து 7.53 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 4.84 சதவீதத்திலிருந்து 3.07 சதவீதமாக குறைந்துள்ளது என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.