ரூ.28 ஆயிரத்தைக் கடந்தது தங்கத்தின் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ரூ.28 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.592 உயர்ந்து, ரூ.28,376-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 7 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,896 வரை உயர்ந்துள்ளது.
பங்குச் சந்தையில் நிலவும் மந்தநிலை காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால், தங்கம் விலை உயர்ந்துள்ளது; பவுன் தங்கம் விரைவில் ரூ.30 ஆயிரத்தை தொடும் என்று தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வந்தநிலையில், சென்னையில் கடந்த 2-ஆம் தேதி ஆபரணத் தங்கம் ரூ.27 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது.
அதன் பிறகு, தங்கம் விலை நாள்தோறும் உயர்ந்து வந்த நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.104 உயர்ந்து, ரூ.27,784-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.28 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.592 உயர்ந்து, ரூ.28,376-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.74 உயர்ந்து, ரூ.3,547-க்கு விற்பனையானது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை மொத்தம் 7 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,896 வரை உயர்ந்துள்ளது. இதுபோல, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 உயர்ந்து ரூ.46.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ1,100 உயர்ந்து ரூ.46,800 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை உயர்வு குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சல்லானி கூறியது: உலக பொருளாதார சந்தை சரிவை நோக்கி செல்கிறது. உற்பத்தி குறியீடு, வேலைவாய்ப்பு குறியீடு, தொழில்துறை குறியீடு ஆகியவை சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பார்வை தங்கத்தின் மீது திரும்பியதால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை மேலும் உயரவே வாய்ப்பு உள்ளது. பவுன் தங்கம் விரைவில் ரூ.30 ஆயிரத்தை தொடும் என்றார் அவர்.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் 3,547
1 பவுன் தங்கம் 28,376
1 கிராம் வெள்ளி 46.80
1 கிலோ வெள்ளி 46,800