கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் 15 சதவீதம் உயர்ந்து ரூ.186 கோடியை ஈட்டியுள்ளது.
நிகழாண்டுக்கான வங்கியின் முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என்.காமகோடி வியாழக்கிழமை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் வங்கியின் மொத்த வர்த்தகம் 15 சதவீதம் உயர்ந்து, ரூ.71,306 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.61,812 கோடியாக இருந்தது.
நிகழாண்டில் முதல் காலாண்டில் வங்கியின் வைப்பு தொகை (டிபாசிட்) 16 சதவீதம் உயர்ந்து, ரூ.39,077 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.33,597 கோடியாக இருந்தது. வங்கி வழங்கிய கடன்கள் (அட்வான்ஸ்) ரூ.28,215 கோடியில் இருந்து ரூ.32,229 கோடியாக அதிகரித்துள்ளது.
வங்கியின் நிகரலாபம் 15 சதவீதம் உயர்ந்து ரூ.186 கோடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு முதல் காலாண்டில் வங்கியின் நிகரலாபம் ரூ.162 கோடியாக இருந்தது. வங்கியின் நிகர வாராக்கடன் 1.89 சதவீதமாகவும், வங்கியின் சொத்தின் மீதான வருவாய் 1.63 சதவீதமாகவும் உள்ளது.
வங்கியின் நிகர மதிப்பு ரூ.4,978 கோடியாக உயர்ந்துள்ளது.
இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.4,317 கோடியாக இருந்தது என்றார் அவர்.