இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் டயர் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் டி.வி.எஸ் ஸ்ரீசக்ரா நிறுவனம் டி.வி.எஸ். யூரோ கிரிப் என்னும் புதிய டயரை சென்னையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.
இந்த புதிய பிராண்ட்டை டி.வி.எஸ். ஸ்ரீசக்ரா நிறுவன இயக்குநர் பி.விஜயராகவன், நிறுவனத்தின் தலைவர் பி.ஸ்ரீநிவாசவரதன் ஆகியோர் அறிமுகப்படுத்தினர். இருசக்கரவாகன பிரிவில் நிறுவனத்தின் நிலையை வலுப்படுத்தும் நோக்கில் புதிய பிராண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 270 கி.மீ. தூரம் வரை செல்லும் வகையில், இந்த டயர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையிலான சிசி திறனுக்கேற்பவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டி.வி.எஸ். ஸ்ரீசக்ரா நிறுவன இயக்குநர் பி.விஜயராகவன் கூறியது: இரண்டு, மூன்று சக்கர வாகனங்களுக்கு மட்டுமே டி.வி.எஸ். நிறுவனம் டயர் தயாரித்து வருகிறது. மாதந்தோறும் 28 லட்சம் டயர்கள் என்று ஆண்டுக்கு 3.4 கோடி டயர்களை டி.விஎஸ் தயாரிக்கிறது. இந்தியாவில் எல்லா வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கும் டயர்களை தயாரித்து வழங்கி வருகிறோம். இன்று அறிமுகப்படுத்தப்பட்ட யூரோகிரிப் இளைய தலைமுறைக்கு பிடிக்கும். சர்வதேச அளவில் இத்தாலியின் மிலானில் தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள எங்கள் ஆலையும் மிலானில் உள்ள தொழில் நுட்ப மையமும் ஒருங்கிணைந்து செயல்படும். தற்போது பெல்ட்டட் ரேடியல் என்னும் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி டயர் தயாரித்து வழங்கியுள்ளோம். இந்த தொழில்நுட்ப முறை அதிக வேகத்தில் செல்லும் டயர் உருவாக்க உதவுகிறது.
உலக அளவில் அதிக இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. 2018-இல் மட்டும் இந்தியாவில் 3.3 கோடி இருசக்கர வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 18 வயது முதல் 30 வயது வரை மொத்தம் 8 கோடி மக்கள் உள்ளனர். எனவே, இருசக்கர வாகனத் துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. டி.வி.எஸ். டயர் நிறுவனத்தின் ஆண்டுதோறும் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது என்றார் அவர்.