அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி டேவிட்ஸன் நிறுவனம், பிஎஸ்-6 மாசுக்கட்டுப்பாட்டு தரத்தில் தனது முதல் பைக்கை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.
இதுகுறித்து ஹார்லி-டேவிட்ஸன் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் ராஜசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மோட்டார் வாகனங்களுக்கான பிஎஸ்-6 மாசுக்கட்டுப்பாட்டு தர நிர்ணய விதிமுறைகள் வரும் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரவுள்ளன. இந்த நிலையில், நிறுவனம் முதன்முதலாக பிஎஸ்-6 தரக் கட்டுப்பாட்டில் ஸ்டீரீட் 750 என்ற புதிய வகை பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில், 750 சிசி திறன் கொண்ட குளிரூட்டப்பட்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆன்டி-லாக் பிரேகிங் (ஏபிஎஸ்) தொழில்நுட்பவசதியுடன் வெளிவந்துள்ள இப்புதிய பைக்கின் விலை ரூ.5.47 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹார்லி டேவிட்ஸன் நிறுவனத்தின் 10 ஆண்டு இந்திய சந்தை பயணத்தில் 24,000 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
ஹார்லி டேவிட்ஸன் நிறுவனம் இந்தியாவில் 17 மாடல்களில் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது.