ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் வரும் நிதியாண்டில் ரூ.7,500 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநர் (சந்தைப்படுத்துதல்) பாலாஜி கே மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராம்கோ நிறுவனம் விரிவாக்க நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கலவட்டலா கிராமத்தில், ஆண்டுக்கு 31.5 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யும் ஆலையை ராம்கோ அமைத்து வருகிறது. இதற்காக, நிறுவனம் ரூ.1,500 கோடியை முதலீடு செய்துள்ளது.
இந்த திட்டம் அமலுக்கு வரும் நிலையில், ஆந்திராவில் நிறுவனத்தின் சிமென்ட் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 1 கோடி டன்னை நெருங்கி விடும். இதையடுத்து, ஆந்திராவில் மிகப்பெரிய அளவிலான சிமென்ட் தயாரிக்கும் நிறுவனமாக ராம்கோ உருவெடுக்கும்.
கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.5,146 கோடியாக இருந்தது. இந்த நிலையில், நிறுவனம் தற்போது பல்வேறு விரிவாக்க நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொண்டு வருவதால் அடுத்த நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.7,500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சிமென்ட் உற்பத்தி திறன் 1.25 கோடி டன் என்ற அளவில் உள்ளது என்றார் அவர்.