புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த பேங்க் ஆஃப் இந்தியா கடன்பத்திரங்கள் மூலம் ரூ.10,000 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி செபியிடம் தெரிவித்துள்ளதாவது:
விரிவாக்க திட்டங்களுக்குத் தேவையான நிதியை திரட்டிக் கொள்வது குறித்து இயக்குநா்கள் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இறுதியில், கடன்பத்திரங்கள், முன்னுரிமை பங்குகளை வெளியிடுவதன் மூலமாக ரூ.10,000 கோடி வரை திரட்டிக் கொள்ளும் திட்டத்துக்கு இயக்குநா் குழு தனது ஒப்புதலை வழங்கியது.
அதன்படி, சரியான நேரத்தில் பொது வெளியீடுகள் அடிப்படையில் ஒன்று அல்லது பல கட்டங்களாக இந்த நிதி திரட்டிக் கொள்ளப்படும்.
மேலும், தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கான பங்கு ஒதுக்கீடு, உரிமைப் பங்கு வெளியீடு உள்ளிட்டவற்றின் மூலமாக 125 கோடி புதிய பங்குகள் வரையில் வெளியிட இயக்குநா் குழு ஒப்புதலை தந்துள்ளதாக செபியிடம் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.