மூன்றாம் காலாண்டில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் 8.53 சதவீதம் அதிகரித்து ரூ.1,320.57 கோடியாக உள்ளது.
இது தொடர்பாக சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அதன் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன் வெளியிட்டார்.
அதன் பின், செய்தியாளர்களிடம் கூறியது: நிறுவனத்தின் மொத்த வருவாய் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.1,320.57 கோடியாக இருந்தது.
கடந்த 2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.1,216.75 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 8.53 சதவீதம் அதிகம். மொத்த செலவினம் ரூ.1,201.51 கோடியிலிருந்து 9.64 சதவீதம் அதிகரித்து ரூ.1,317.44 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.15.24 கோடியிலிருந்து 79.46 சதவீதம் சரிந்து ரூ.3.13 கோடியானது.
ஆலைகளின் மொத்த உற்பத்தி திறனில் 76 சதவீதம் அளவுக்கு சிமென்ட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 70 சதவீதமாக இருந்தது.
மொத்த விற்பனை 8 சதவீதம் அதிகரித்து 29.38 லட்சம் டன்னாக இருந்தது. கடந்த ஆண்டில் விற்பனை 27.76 லட்சம் டன்னாக காணப்பட்டது.
நிறுவனத்தின் முதன்மைச் சந்தையான தமிழகத்தில் கடந்த ஆண்டு கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் எரிபொருள்களின் விலையும், பெட்ரோலியப் பொருள்களின் விலையும் அதிகரித்தது. மேலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததால் நிறுவனத்தின் செயல்பாட்டில் தாக்கம் ஏற்பட்டது. தற்போது எரிபொருள்களின் விலை கணிசமாகக் குறைந்து வருவதால் வரும் காலாண்டுகளில் சிமென்ட் உற்பத்தி, தேவை, விற்பனை ஆகியவை அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்றார்.