ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், மாநில அரசு போக்குவரத்து கழகங்களிடமிருந்து 2,580 பேருந்துகளை தயாரித்து அளிப்பதற்கான ஒப்பந்த ஆணைகளைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத்
கே.தாசரி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அசோக் லேலண்ட் நிறுவனம் பல்வேறு மாநில அரசு போக்குவரத்து கழகங்களிடமிருந்து 2,580 பேருந்துகளை தயாரித்து அளிப்பதற்கான ஒப்பந்த ஆணைகளைப் பெற்றுள்ளது. அதன்படி, இந்த ஒப்பந்த ஆணைகள் இன்ஸ்டியூட் ஆஃப் ரோட் டிரான்ஸ்போர்ட், சென்னை, உத்தர பிரதேச மாநில சாலைப் போக்குவரத்து கழகம், சண்டிகர் டிரான்ஸ்போர்ட் அண்டர்டேக்கிங் ஆகியவற்றிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி பேருந்துகள் அனைத்தும் 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாநில அரசுகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்படும்.
வாடிக்கையாளர்களின் தேவையறிந்து அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதத்தில் வாகனங்களை தயாரித்து அளிப்பதில் அசோக் லேலண்ட் நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கிறது.
அந்த வகையில், மாநில அரசுகளுக்கு தயாரிக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் அதிநவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கியும், புதுமையான கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைத்தும் உருவாக்கப்பட்டதாக இருக்கும் என்றார் அவர்.