பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக கர்ணம் சேகர் பொறுப்பேற்றுள்ளார்.
இதுகுறித்து அந்த வங்கி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக கர்ணம் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது. ஏற்கெனவே அப்பதவியில் இருந்த ஆர்.சுப்ரமணியகுமாருக்கு பதிலாக கர்ணம் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில், கர்ணம் சேகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சிறப்பு அதிகாரியாகவும், முழு நேர இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டிருந்தார். தற்போது அவருக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கர்ணம் சேகர், பாரத ஸ்டேட் வங்கியில் துணை மேலாண் இயக்குநராகவும், தலைமை கடன் வழங்கல் அதிகாரியாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கருவூல மேலாளராகவும் பணியாற்றியுள்ளார்.