மத்திய பட்ஜெட்டில் நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச பொதுப் பங்குகளின் விகிதம் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை திடீர் சரிவு ஏற்பட்டது.
39,908 சென்செக்ஸ் புள்ளிகளுடன் வெள்ளிக்கிழமை தொடங்கிய மும்பை பங்கு வர்த்தகம், காலையில் 40,000 என்ற அளவைக் கடந்தது.
எனினும் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு பங்கு வர்த்தகத்தில் சுணக்கம் ஏற்பட்டது.
இறுதியில், 39,513 புள்ளிகளுடன் சென்செக்ஸ் நிறைவுற்றது. இது முந்தைய வர்த்தக தினத்தைவிட 395 புள்ளிகள் (0.99 சதவீதம்) குறைவாகும்.
தனது பட்ஜெட் உரையில், பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் வைத்திருக்க வேண்டிய பொதுப் பங்குகளின் குறைந்தபட்ச விகித்தை 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக உயர்த்துவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதையடுத்து, டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட 1,174 நிறுவனங்கள் தங்கள் வசமுள்ள ரூ.3.87 லட்சம் கோடி மதிப்பிலான நிறுவனர் பங்குகளை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுப் பங்குகளுக்காக மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்த குறைந்தபட்ச விகிதமான 25 சதவீதத்தையே, முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பைப் பெறாத பல நிறுவனங்களால் எட்ட முடியவில்லை.
இந்த நிலையில் அந்த வரம்பு 35 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது சந்தையில் அதிருப்தியை ஏற்படுத்தியதால் பங்கு வர்த்தகம் சரிவைக் கண்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டியும், வெள்ளிக்கிழமை 136 புள்ளிகள் குறைந்து 11,811 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.