நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ஏற்றுமதி துறை கண்டு கொள்ளப்படவில்லை என இந்திய வர்த்தக மேம்பாட்டு கவுன்சில் (டிபிசிஐ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கவுன்சிலின் தலைவர் மோஹித் சிங்லா சனிக்கிழமை கூறியுள்ளதாவது: சர்வதேச அளவில் விரும்பத்தகாத நிகழ்வுகளால் இந்திய ஏற்றுமதி துறை ஏற்கெனவே மந்த கதியில் உள்ளது. அதன் வளர்ச்சி விகிதமும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே உள்ளது.
இந்த நிலையில், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் வாய்ப்பை பட்ஜெட் தவறவிட்டுள்ளது. மேலும், நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதத்தில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஏற்றுமதி துறையை கவனத்தில் கொள்ளாத பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது என்றார் அவர்.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதியானது 0.63 சதவீதமும், மே மாதத்தில் 3.93 சதவீதமும் மட்டுமே வளர்ச்சி கண்டிருந்தது நினைவுகூரத்தக்கது.