முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஜியோ தொலைதொடர்பு சேவை நிறுவனம் கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. குறைந்த சேவைக் கட்டணம் காரணமாக லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை தொடர்ந்து பெற்று வருகிறது.
மேலும் இடைவிடாத இணைய சேவை இளைஞர்கள் மத்தியிலும் இதற்கு பெரும் வரவேற்பை பெற்றுத்தந்து வருகிறது. இதனால் ஏற்கனவே செயல்பட்டு வந்த இதர தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுக்கு சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது. சில சேவைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன.
இந்நிலையில், தொலைதொடர்பு வர்த்தகத்தில் மே மாத நிலவரப்படி ஏர்டெல்லை பின்னுக்குத்தள்ளி ஜியோ 2-ஆம் இடம் பிடித்துள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 8.2 மில்லியன் மொபைல் சேவை வாடிக்கையாளர்களையும், 323 மில்லியன் இணைய வாடிக்கையாளர்களையும் அந்த நிறுவனம் பெற்றுள்ளது.
ஜியோ-வால் இணைந்த வோடஃபோன், ஐடியா கூட்டணி 387.6 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக சரிவை சந்தித்து வரும் ஏர்டெல் 3-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது.