வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலையொட்டி கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியாக வி.ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கே.சண்முகம் சனிக்கிழமை பிறப்பித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், நகர் மற்றும் ஊரமைப்புத்துறை இயக்குநராக இருந்த வி.ராஜாராமன் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 22 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின்போது கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியாக ராஜாராமன் பணியாற்றினார். தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து அவர் அரசுத்துறை பொறுப்புக்கு (நகர் மற்றும் ஊரமைப்புத்துறை இயக்குநர்) நியமிக்கப்பட்டிருந்தார்.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியாக அவரே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவுடன் இணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்வார்.