விமானப் பயணிகளின் எண்ணிக்கை சென்ற ஜூன் மாதத்தில் விறுவிறுப்பைக் கண்டுள்ளது.
இதுகுறித்து உள்நாட்டு விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கோடைகால விடுமுறையின் உச்சகட்டத்தில் டிக்கெட் விலை அதிகரிப்பு, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சேவையை நிறுத்தியது ஆகியவற்றின் விளைவாக கடந்த ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக சென்ற ஏப்ரலில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 4.5 சதவீத பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் அதற்குப் பிறகான மே மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை 3 சதவீத வளர்ச்சியைக் கண்டது.
இந்த நிலையில், நடப்பாண்டு ஜூன் மாதத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை கடந்தாண்டைக் காட்டிலும் 6.19 சதவீதம் அதிகரித்து 1.20 கோடியானது.
ராகுல் பாட்டியா மற்றும் ராகேஷ் கெங்கவாலுக்கு சொந்தமான இன்டிகோ நிறுவனம் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டாலும் ஜூன் மாதத்தில் 57.70 லட்சம் பயணிகளை சுமந்து சென்று சந்தை பங்களிப்பில் தனது முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது.
இதையடுத்து, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 18.60 லட்சம் பயணிகளையும், ஏர் இந்தியா 15.5 லட்சம் பயணிகளையும் கையாண்டு இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளது.
இந்நிறுவனங்களைத் தொடர்ந்து, கோஏர், ஏர்ஏஷியா இந்தியா மற்றும் விஸ்தாரா நிறுவனங்கள் முறையே 13.3 லட்சம், 7.72 லட்சம், 6.48 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளன.