முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி சென்ற ஏப்ரல் மாதத்தில் 2.6 சதவீதமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 4.7 சதவீதமாக காணப்பட்டது. இது, நடப்பு 2019-ஆண்டின் இதே கால அளவில் 2.6 சதவீதமாக குறைந்துள்ளது.
நடப்பாண்டு ஏப்ரலில் நிலக்கரி துறையின் உற்பத்தி வளர்ச்சி 2.8 சதவீதமாக சரிவை சந்தித்துள்ளது. இதைத் தவிர, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உரம் ஆகிய துறைகளின் உற்பத்தி வளர்ச்சியும் பின்னடைவையே சந்தித்துள்ளது.
அதேசமயம், மின் உற்பத்தி துறையின் உற்பத்தி வளர்ச்சி 5.8 சதவீதம் என்ற அளவிலும், சுத்திகரிப்பு பொருள்கள் துறையின் உற்பத்தி 4.3 சதவீதம் என்ற அளவிலும் அதிகரித்து காணப்பட்டது என புள்ளிவிவரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய எட்டு உள்கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண்ணை (ஐஐபி) கணக்கிடுவதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மொத்த தொழிலக உற்பத்தியில் இந்த எட்டு துறைகளின் பங்களிப்பு மட்டும் 41 சதவீதம் அளவுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.