ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 58 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2018-19 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.51.5 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபத்துடன் ஒப்பிடுகையில் 58 சதவீதம் அதிகமாகும்.
நிகர வட்டி வருவாய் 3 சதவீதம் அதிகரித்து ரூ.116.3 கோடியாக காணப்பட்டது.
நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் கடன் அனுமதி அளவு ரூ.972.8 கோடியாகவும், விநியோக அளவு ரூ.878.1 கோடியாகவும் இருந்தது. மொத்த வாராக் கடன் விகிதம் 3.9 சதவீதத்திலிருந்து 2.95 சதவீதமாக குறைந்துள்ளது.
2017-18 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2018-19 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 17 சதவீதம் உயர்ந்து ரூ.234.6 கோடியாகவும், நிகர வட்டி வருவாய் 2 சதவீதம் அதிகரித்து ரூ.469.3 கோடியாகவும் இருந்தது.
கடன் அனுமதி அளவு 9 சதவீதம் உயர்ந்து ரூ.3,370 கோடியாகவும், கடன் விநியோக அளவு 10 சதவீதம் அதிகரித்து ரூ.3,091.8 கோடியாகவும் காணப்பட்டது என அந்நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.