டாடா குழும நிறுவனங்களுடன் மேலும் நெருக்கமாக செயல்படுவோம் என்று டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்தார்.
டிசிஎஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டம் மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட அவர் மேலும் பேசியதாவது:
டாடா குழும நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படக்கூடியவை. இருப்பினும், மேலும் நாம் நெருக்கமாக இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து பார்க்கும்போது சில முன்னேற்றங்கள் தென்படுவது கண்கூடாக தெரிகிறது. ஆனால், இது போதுமானதல்ல. நமக்கு இன்னும் அதிக அளவிலான முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன. அதற்கு நாம் ஒருங்கிணைந்து பணியாற்றுவது அவசியம்.
டிசிஎஸ் நிறுவனத்தைப் பொருத்தவரையில், ஆண்டுக்கு 1 கோடி சம்பளம் பெறுவோரின் 100-க்கும் மேல் அதிகரித்துள்ளது. மொத்த வருவாயில் பணியாளர் செலவினம் 53 சதவீத அளவுக்கே உள்ளது. இதர நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும் என்றார் அவர்.