இந்தியாவின் உருக்கு உற்பத்தி சென்ற மே மாதத்தில் 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து உருக்கு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
நடப்பாண்டு மே மாதத்தில் நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தி 92.35 லட்சம் டன்னை எட்டியது. கடந்தாண்டு இதே கால அளவில் உற்பத்தி செய்யப்பட்ட 87.79 லட்சம் டன் உருக்குடன் ஒப்பிடுகையில் இது 5.2 சதவீதம் அதிகமாகும்.
2019-20 நிதியாண்டின் ஏப்ரல்- மே மாதங்களில் இதன் உற்பத்தி 1.74 கோடி டன்னிலிருந்து 3.4 சதவீதம் உயர்ந்து 1.80 கோடி டன்னைத் தொட்டது.
விற்பனைக்கு தயாரான உருக்கு பொருள்களின் உற்பத்தி 2.11 கோடி டன்னிலிருந்து 1 சதவீதம் உயர்ந்து 2.13 கோடி டன்னாக இருந்தது.
அதேபோன்று, நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் உருக்கு பயன்பாடு 1.52 கோடி டன்னிலிருந்து 6.5 சதவீதம் அதிகரித்து 1.62 கோடி டன்னானது.
மே மாதத்தில் உருக்கு பொருள்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டுமே சரிவை சந்தித்துள்ளது.
கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டின் இரு மாதங்களில் உருக்கு ஏற்றுமதி 10.18 லட்சம் டன்னிலிருந்து 29.8 சதவீதம் சரிந்து 7.15 டன்னாக இருந்தது.
அதேபோன்று, அதன் இறக்குமதியும் 12.18 லட்சம் டன்னிலிருந்து 8 சதவீதம் குறைந்து 11.12 லட்சம் டன்னாக காணப்பட்டது என அந்தப் புள்ளிவிவரத்தில் உருக்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரும் 2030-31-க்குள் உருக்கு உற்பத்தியை 30 கோடி டன்னாக உயர்த்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.