தென் கொரிய நிறுவனமான கியா மோட்டார்ஸ், தனது சொகுசு வகை தயாரிப்பான செல்டோஸ் காரை இந்திய சந்தைகளில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து கியா மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஹன்-வூ பார்க் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிறுவனத்தின் சர்வதேச விரிவாக்க திட்டங்களுக்கு இந்தியா மிக முக்கிய மையமாக உள்ளது. கியா மோட்டார்ஸின் எதிர்கால வெற்றிக்காக மிகப்பெரிய ஆற்றல் மற்றும் வளங்களை முதலீடு செய்துள்ளோம்.
அதன் ஒரு பகுதியாக தற்போது சர்வதே அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற செல்டோஸ் காரை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இந்திய சந்தையை மனதில் வைத்து பிரத்யேகமாக இந்தக் காரை வடிவமைப்பு செய்து மேம்படுத்தியுள்ளோம்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் செல்டோஸ் கார், மத்திய கிழக்கு , ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் இதர ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்
அடுத்த இரண்டு ஆண்டுகளில் அனந்தபூர் ஆலையில் செல்டோஸ் உள்ளிட்ட நான்கு புதிய மாடல் கார்களை தயாரித்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கியா நிறுவனம் 200 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது. அனந்தபூர் ஆலை 110 கோடி டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது, ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறனுடையது.
கியா மோட்டார்ஸ் இந்தியாவில் 265 விநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்களுடன் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. இது, 2020-இல் 300-ஆகவும், 2021-இல் 350-ஆகவும் அதிகரிக்கப்படும் என்றார் அவர்.